காதல் கார்த்திகை டிசம்பர் 12, 2007
![]() |
விண்மீன்களுக்கு மத்தியில் நிலா; தீபங்களின் நடுவில் நீ! |
|
சன்னிதி வாசல் யாசகர்களாய் திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன விளக்குகள் நீ இடப்போகும் ஒளிப்பிச்சைக்காக |
|
![]() |
உன் நினைவெனும் தீபத்தில் விட்டிலாய் விழுந்து விழுந்து முடிகின்றன என் மணித்துளிகள் |
|
புத்தாடையணிந்த பூரிப்பில் நீ உலவும் அழகைக் காணவேனும் நாள்தோறும் வாராதா ஏதேனும் பண்டிகை |
|
கண்ணாமூச்சி ஏனடா : என் பார்வையில் நவம்பர் 12, 2007
ராடன் நிறுவனம் & யுடிவி தயாரிப்பில், ப்ரியா.v இயக்கத்தில், சத்யராஜ், ராதிகா, ஸ்ரீப்ரியா, ப்ரித்விராஜ், சந்தியா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள திரைப்படம் ‘கண்ணாமூச்சி ஏனடா’
கதைச்சுருக்கம் : ப்ரித்விராஜ் சந்தியாவை மலேசியாவில் சந்திக்கிறார். காதலில் விழுகிறார். ப்ரித்வியின் ஐயர் மாமா ஜாதிவெறியில் இந்த காதலை எதிர்க்கிறார். இருவரும் இந்தியா வருகிறார்கள். இங்கே சந்தியாவின் அப்பா சத்யராஜீக்கு ப்ரித்வியை பிடிக்கவில்லை. இதனால் சண்டையிட்டு பிரியும் சத்யராஜ்-ராதிகா ஜோடியை ப்ரித்வி இணைத்து வைக்க சத்யராஜீம் ப்ரித்விராஜீம் சமாதானம் ஆக, நடுவில் சந்தியாவில் கொஞ்சம் பிகு பண்ண கடைசியில் இனிதே முடிகிறது ப்ரித்விராஜ்-சந்தியா ஜோடியின் திருமணம்
ப்ரித்விராஜ் : அவரின் முந்தைய படங்களில் பார்த்தது போலவே இதிலும் மனிதர் பேசுகிறார், பேசிகிறார்…. பேசிக்கொண்டே இருக்கிறார். பல இடங்களில் எரிச்சலும், சலிப்புமே மிஞ்சுகிறது. மத்தபடி அவருக்கு பெரிதாக படத்தில் செய்துவிட எதுவும் இருக்கவில்லை
சந்தியா : பொறியில் அடைப்பட்ட எலிக்குட்டிப் போல் கீச்சு கீச்சென்று கத்திக் கொண்டே திரிகிறார். பாவம், டப்பிங் பேசும் போது என்ன பிரச்சனையோ தெரியவில்லை? மத்தபடி சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.
சத்யராஜ் & ராதிகா : சத்யராஜ் ஒரு பொறுப்பான கோபமான காவல்துறையில் பணிபுரியும் அப்பாவாக வலம் வந்திருக்கிறார். ராதிகா ஒரு இயல்பான குடும்பத்தலைவியாக வந்து செல்கிறார். நடுவில் கொஞ்சம் பெண்ணியமும் பேசுகிறார்.
ஸ்ரீப்ரியா : ‘நட்புக்காக ஸ்ரீப்ரியா’, எனினும் அவர் வந்தவுடன் ஒரு தனி கலகலப்பு வந்துவிடுகிறது படத்தில். அவரும் சத்யராஜீம் அடிக்கும் லூட்டிகள் கலகலக்க வைக்கின்றன. ஸ்ரீப்ரியாவின் டைமிங் மற்றும் நகைச்சுவை உணர்வு பற்றிச்சொல்லவா வேண்டும்?
இசை : இசை ரொம்பவே சுமார் ரகம். ‘அன்று வந்தது அதே நிலா’ பாடலின் ரீமிக்ஸ் தவிர மனதில் எதுவும் நிற்கவில்லை. யுவன்ஷங்கர் ராஜாவிற்கு என்ன சிக்கலோ? மேலும் பாடல்களின் ஒளிப்பதிவு சுத்த மோசம். மணிரத்னத்தின் மாணவி பாடல்களை இப்படி எடுத்து தள்ளியிருக்கிறார் என்பதை நினைக்கும் போது வேதனையே மிஞ்சுகிறது. அனேகமாக பாடல்கள் எல்லாமே திரைக்கதையில் திணிக்கப்பட்டே இருக்கின்றன
ஒளிப்பதிவு : ரொம்பவே அழகான ஒளிப்பதிவு. கண்களை பதம் பார்க்காமல், மிக இயல்பாக இருக்கிறது. மலேசியக் காட்சிகள் பளபள என்றால் ஊட்டி காட்சிகளோ குளுகுளு ரகம்.
ப்ரியா.V : முதலில், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு வாழ்த்துக்கள் ப்ரியாவிற்கு. எங்கேயும் நெருடாமல், நல்ல ஓட்டத்தோடுக் கூடிய திரைக்கதை. ஆனால் அதே சமயம் இந்தக் கதையை இன்னும் கலகலப்பாகவும் அழகாகவும் கொடுத்திருக்கலாம். (ப்ரித்விராஜ் பேசுவது தான் கலகலப்பு என்றால், ஆள விடுங்க சாமி)
மணிரத்தினத்தின் மாணவி என்ற காரணத்தினாலும் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் இயக்குனர் என்பதாலும் ப்ரியாவிடம் கொஞ்சம் அதிகமாவே எதிர்ப்பார்க்கிறோமோ என்னவோ?
அப்புறம் ப்ரியா, படத்தின் பல காட்சிகள் GUESS WHO மற்றும் MEET THE PARENTS படங்களில் வந்துள்ளது போலவே இருக்கிறதாமே?
அப்புறம், கிளைமாக்ஸீக்காக காத்திராமல் எழுந்து வந்துவிடுவது உத்தமம். அப்படி ஒரு இழுவை………. எப்படியும் இது தான் நடக்கும் என்று தெரிந்த ஒரு முடிவை இத்தனை இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.
கொலு அக்டோபர் 18, 2007
நித்தமும் என் மனதில்
கொலுவீற்றிருக்கும்
அம்மன் நீ!
கொலுப்பொம்மைகள் எல்லாம்
ஓய்யாரமாக வீற்றிருக்கின்றன படிகளில்;
வருபவர்களோ உன்னையே
பார்த்திருக்கிறார்கள்
கொலு வைத்தால்
அம்பிகை வீட்டிற்கு வருவாள்
என்று நம்புகிறாள் அம்மா!
நீ வந்துப்போனதில் இருந்து நானும்…
கொலுப்பார்க்க வந்த
உனைப்பார்த்த பிரமிப்பில்
உறைந்து நிற்கிறேன்;
எத்தனைப் பெரிய பொம்மை
என வியக்கிறது
வந்திருக்கும் குழுந்தை ஒன்று
உரக்க சொன்னதில்லை நீ! அக்டோபர் 10, 2007
பிறிதொரு நாளில் சேர்ந்தே படிக்கலாமென
பத்திரப்படுத்திய ஆட்டோகிராப் ஏட்டை
மெல்ல புரட்டுகிறேன் தனிமையில்
வழக்கமான வார்த்தைகளையும்
வாழ்த்துக்கவிதைகளையும் தாண்டி
புத்தகமெங்கும் இரைந்து
கிடக்கிறது நம் காதலின் நினைவுகள்
நம் பொருத்தத்தை பாராட்டும் தோழனின் மகிழ்வு
அடுத்த சந்திப்பிற்கான சந்தர்ப்பமாய்
நம் திருமணம் அமையுமென நம்பிய கனவுகள்;
அதற்கு வரமுடியுமோ என்ற சந்தேகத்தில் அப்போதே
அழத்தொடங்கிய தோழியின் புலம்பல்கள்……
காதலை காகிதத்தில் சொல்ல மறுத்துவிட்ட உன்னால்
பக்கவாத்தியங்கள் பலமாக இசைக்கயில்
பாடகி மட்டும் மௌனம் காக்கும் இசைக்கச்சேரியாய்
தானிருக்கிறது இந்த புத்தகம்
உணர்வுகளை எப்போதும் உரக்க சொன்னதில்லை நீ;
பிரியத்தின் போதும்,
பிரிவின் போதும்
-
பிரேம்குமார் சண்முகமணி
*** இந்தக் கவிதை தங்கம் மாத இதழின் செப்டம்பர் பதிப்பில் வெளியானது
பா.க.ச ஆண்டு விழா போட்டி : என் ‘தல’ கவுஜ முயற்சி ஆகஸ்ட் 31, 2007
அன்பார்ந்த பா.க.ச உறுப்பினர்களே,
இதுவரை நான் வலையுலக போட்டிகளில் கலந்துக்கொண்டதில்லை. ஆக, இது என் ‘தல’ முயற்சி. (அதாங்க, முதல் முயற்சி) எல்லோரும் உங்க ஆதரவு தர வேண்டுகிறேன்
சங்கம் கொண்ட பெருந்’தல’
*****************
’தல’ என்றால் நீ தான் பெருந்’தல’
அப்பட்டம் வேறார்க்கும் பொருந்’தல’
பலர் ’தல’ கருந்’தல’
சிலர் ’தல’ வெறுந்’தல’
உனக்கு மட்டுமே
வட்டமாக ’தல’
பட்டமாக ’தல’
கலாய்ப்பதை நாங்க நிறுத்’தல’
புத்தி சொல்லியும் திருந்’தல’
உமக்கும் அதொன்றும் உறுத்’தல’
அதனால் பெருசா வருந்’தல’
என்னைக்கு வருமோ உமக்கு விடு’தல’
அதுவரைக்கும் கண்டுக்காம விடு ’தல’
இப்படிக்கு நட்பு – 4 ஆகஸ்ட் 30, 2007

நீயொரு வண்ணம்
நானொரு வண்ணம்
நட்பு வானவில்

முகந் தெரியா
உன் நட்பில் திளைக்கையில்
புரிந்தது
அகம் நக நட்பது…

உன் நண்பனைக் காட்டு
உன்னைப் பற்றிச் சொல்கிறேனெனச்
சொல்லியவருக்கு எப்படி புரியவைப்பது
நம் நட்புவட்டம்
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
ஒரு குட்டி இந்தியா என்று
இந்த நட்புக் கவிதைகள் கீற்று தளத்தில் வெளியாகி உள்ளது
இப்படிக்கு நட்பு – 3 ஆகஸ்ட் 27, 2007
முதன்முதலாய் பார்த்துக்கொண்டது,
பரஸ்பரம் புன்னகைகள்
பறிமாறிக்கொண்டது,
அறிமுகத்தில் தொடங்கி
கதைகள் பேச ஆரம்பித்தது,
உன் அருகாமை இல்லாத
பொழுதுகளில் தவித்துப்போனது,
இவையெல்லாம் நடந்தேறிய
தேதிகளும் கிழமைகளும்
சத்தியமாய் நினைவில்லை,
நல்லவேளையாய் நட்பில்
அது தேவைப்படுவதுமில்லை!
இப்படிக்கு,
நட்பு
இப்படிக்கு நட்பு – 2 ஆகஸ்ட் 16, 2007
பள்ளியில் தான் தொடங்குகின்றன அனேகம் நட்புகள். அந்த நட்புக்கு என்றுமே நீங்காத இடம் உண்டு நெஞ்சில். முதன் முதலில் பிரிவு என்ற சொல்லை சந்திப்பதும் அந்த நட்பு தான். பள்ளி தான் உலகமே என்று நம்பிக்கொண்டிருக்கும் ஜீவன்களை பிரித்து உலகின் வெவ்வேறு மூலைகளில் வீசிவிடுகிறது காலம். ஆசைக்கு தக்கபடி, ஆஸ்திக்கு தக்கபடி ஆளுக்கு ஒரு திசை நோக்கி பயணப்படுகிறோம்…….. சுழன்று கொண்டே இருக்கும் உலகத்தில் என்றேனும் ஒரு நாள் மீண்டும் சேருவோம் என்ற நம்பிக்கையோடு. பதினான்கு ஆண்டுகள் ‘பெத்தி செமினேர் மேனிலைப்பள்ளி, புதுச்சேரி’யில் படித்த காலங்களையும் நண்பர்களையும் நினைத்து…..
இப்படிக்கு நட்பு – 2

ஒளிபுகா அடர்க்கானில்
ஒளிந்திருந்தோம் சில காலம்
களித்திருந்தோம் நன்றாய்
அக்கானிடையே ஒன்றாய்
ஆலென்றாலும் பனையென்றாலும்
ஆரும் பிரித்துப்பார்த்தில்லை – கொடுங்
காலம் வரும்வரை நம்காட்டில்
அறுவடையும் நடந்ததில்லை
வசந்தம் மட்டுமே வந்த பாதையில்
புயலும் ஒரு முறை வீசிற்று
கசக்கும் நினைவுகளை
இதயத்தில் பதித்துப் போனது
இலையுதிர் காலமென
இயம்பக் கேட்டதுண்டு
மரங்களே உதிர்ந்திடும்
மாயமும் கண்டோம் அன்று.
திசைக்கு ஒருவரென
யாவரும் பிரிந்தோம்;
ஆசைக்கு தக்கபடி
என்னவோ ஆனோம்!
இனி எக்கணம் சந்திப்போமோ?
எவ்வண்ணம் சந்திப்போமோ?
எப்படியும்,
நினைவுத்தென்றல் வீசுகையிலெல்லாம்
படபடத்துக்கொண்டு தான் இருப்போம்
பழையக் காட்டை நினைத்து…






