மொழியோடு ஒரு பயணம்

கற்றவை , பெற்றவை , உற்றவை….

என்னவென்பதாம்?? ஆகஸ்ட் 31, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 5:10 மு.பகல்

உன்னால் கவிதை
படைக்கும்
நான் கவிஞனெனில்
உன்னை படைத்த
உன் பெற்றோரை
என்னவென்பதாம்??

 

அறிவியல் விதி ஆகஸ்ட் 31, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 5:09 மு.பகல்

இது
நியூட்டனின் எத்தனாவது விதியென
கண்டறிய வேண்டும்;

எந்நிலையிலும்
நீ கடக்கும் வேளையில்
கண்கள் தாமாகவே
உனது பிம்பத்தை
நோக்கி நகும்.

 

சுற்றுலா ஆகஸ்ட் 9, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:48 மு.பகல்

இரண்டு மாதமாய்
திட்டமிட்டு,
‘இந்த வாரம் ஊருக்கு வரமாட்டாயா?’
செல்லச் சண்டையிட்ட அம்மாவிற்க்கு
சமாதானம் சொல்லி,
அலுவலகத்தில்
விடுமுறை போராட்டம்
ஒன்று செய்து;
சொகுசு ஊர்தியிலும்
சுகமில்லா நீண்ட பயணம்
செய்ததெல்லாம்,
என்றோ
உதறிவிட்டு வந்த
மலைகளையும் காடுகளையும்
காணத்தான் !

 

என்ன மாயமோ ??? ஆகஸ்ட் 9, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:45 மு.பகல்

எத்தனையோ காலமாய்
இதே வழியில்
பயணித்திருந்தாலும்
 
அந்த தெருமுனை
பெட்டிக்கடையும்
மந்தமாய் விளக்கெரியும்
மளிகைக்கடையும்
இப்போதுதான்
பளிச்செனப் புலப்படுகின்றன

உன் பெயரின்
மாயமாய்
இருக்குமோ?

 

மழை தருமோ மேகம் ?! ஆகஸ்ட் 9, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:38 மு.பகல்

நீ கூந்தல் துவட்ட,
என் மேல்
தெறித்த
நீர்த்துளிகள் தான்
உறுதி செய்தன
மழை மேகம் கருப்பென்பதை.

 

நீயில்லாமல்… ஆகஸ்ட் 9, 2006

கோப்பு வகை: என் கவிதைகள் (My PoEmS) — பிரேம்குமார் சண்முகமணி @ 6:36 மு.பகல்

பேருந்துக்கான
நீண்ட காத்திருப்பும்,

பெருங்கூட்டத்திலும்
உறுத்தும் தனிமையும்,

பக்கத்து இருக்கையின்
பரிச்சயமில்லா முகமும்,

நெடும் பயணத்தில்
நெருடும் அமைதியும்,

நீயில்லாத வெறுமையை
வெகுவாய் குத்திக்காட்டுகிறது.